பஞ்சாபில் ஆசிரியர் பட்டம் பெற்றவர்கள் பணி கோரி பிரியங்கா காந்தி பங்கேற்ற கூட்டத்தி்ல் திடீரென போராட்டம் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சரண்ஜித் சிங் சன்னியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆசிரியர் பட்டம் பெற்றவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று சங்ரூர் பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆசிரியர்கள் சிலர் அரசு பணி கோரி திடீரென முழக்கங்களை எழுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்தினர்.
அரசு பணி கோரி முழக்கமிட்ட ஆசிரியர்களை வாயை பொத்தி வாகனங்களில் ஏற்றிய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தற்போது வளர்ந்து வரும் ஆம் ஆத்மி கட்சியானது தனது பலத்தை அதிகரிக்க இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து வருகிறது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இந்த போராட்டங்களை வழிநடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடி தருவதற்கு சில நாட்களுக்க முன்னர் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து டெல்லியில் கெஜ்ரிவால் வீட்டுக்கு முன்னர் ஆசிரியர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








