ஒமிக்ரான் வைரஸ் தொற்று தடுப்பூசிகளின் செயல்திறனை வெகுவாக குறைக்கும் என்றும் வேகமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தி வந்த நிலையில், தடுப்பூசிகள் தொற்று பாதிப்பை வெகுவாக குறைத்து உயிரிழப்புகளை கட்டுப்படுத்தின.
இந்நிலையில் கடந்த நவம்பர் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 63 நாடுகளில் இந்த புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஒமிக்ரான் தொற்றானது தடுப்பூசியின் செயல்திறனை வெகுவாக குறைக்கும் என்றும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவும் என்றும் உலக சுகதார அமைப்பு எச்சரித்துள்ளது.
அதேபோல இது டெல்டா வகை கொரோனா வைரஸ் போல அதிக வீரியமாக பாதிக்காவிட்டாலும் லேசான பாதிப்புடன் சமூக பரவலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் மூன்றாம் தவணை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவித்துள்ளன. இந்தியாவில் இதுவரை 38 பேருக்க ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








