மகாராஷ்டிராவில் முதிய தம்பதி கொரோனாவில் இருந்து மீண்டு வந்த சம்பவம் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் சவான். இவருடைய 105 வயதான தந்தை மற்றும் 95 வயதான தாய் ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் சுரேஷ் சவானின் 3 குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரின் பெற்றோர் இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்விளைவாக அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து அவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது, “சரியான நேரத்தில் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதால் கொரோனாவிலிருந்து அவர்களை காப்பாற்ற முடிந்தது” என்று தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சுரேஷ் சவான் கூறுகையில், “கொரோனாவால் அதிகம் உயிரிழப்பவர்கள் முதியவர்கள்தான். ஆனால், தன் பெற்றோர் கொரோனாவிலிருந்து மீண்டு வருவோம் என்று நம்பிக்கையாக இருந்தார்கள், அதன்படி அவர்கள் மீண்டு வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 105 வயதை கடந்த தம்பதி கொரோனாவில் இருந்து மீண்டிருப்பது மக்களிடம் புதிய ஒரு நம்பிக்கையை விதைத்திருக்கும்.