சிவகங்கை பள்ளிக்கு சீல் வைக்க அதிகாரிகள் ஒப்புதல்! உயிரிழந்த மாணவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது!!!

சிவகங்கை மாவட்டம் முலைக்குளம் கிராமம் அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து 7-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக்கு சீல் வைக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை அடுத்து மாணவனது உடலைப் பெற்று பெற்றோர் அடக்கம்…

சிவகங்கை மாவட்டம் முலைக்குளம் கிராமம் அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து 7-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக்கு சீல் வைக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை அடுத்து மாணவனது உடலைப் பெற்று பெற்றோர் அடக்கம் செய்தனர். 

சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை கிராமத்தில் செயிண்ட் சார்லஸ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். ((இன்று ))பள்ளி சார்பில் இயக்கப்பட்டு வந்த வாகனம் மாணவர்களை வழக்கம்போல் ஏற்றி கொண்டு சென்ற போது, முலைக்குளம் பகுதிக்கு அருகே சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வேம்பத்தூரை சேர்ந்த வெள்ளைச்சாமி – கற்பகம் தம்பதியின் மகனான 7-ம் வகுப்பு மாணவர் ஹரிவேலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 20 மாணவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் உயிரிழந்த, மாணவர் ஹரிவேலனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பள்ளி வாகனம் கவிழ்ந்து மாணவர் உயிரிழப்பு - பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு! -சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவர் ஹரிவேலனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பள்ளி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் இடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே ஹரிவேலனின் தாய் மருத்துவமனை முன்பு கதறிய காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த உயிரிழந்த மாணவரின் தாய் கற்பகம், விதிமுறை மீறி செயல்பட்ட பள்ளியை மூட வேண்டும் என்று கண்ணீருடன் பேட்டியளித்தார். 15 வருடம் தவமிருந்து பெற்ற செல்ல மகனை இழந்துவிட்டதாகவும் கதறினார்.

தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் கோட்டாட்சியர் சுகிதா, மானாமதுரை டிஎஸ்பி கண்ணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கோட்டாட்சியர் சுகிதா உறுதியளித்தார். ஆனால், தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் மாவட்ட எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தினார்.

பள்ளியின் வாகனத்தை வழக்கமாக நடராஜ் என்பவர் இயக்கி வந்த நிலையில், இன்று நடராஜ் விடுமுறை என்பதால், அவரது சகோதரர் சுரேஷ் என்பவர் வாகனத்தை இயக்கியுள்ளார். மேலும், வாகனத்தில் கதவு இல்லாமல் இருந்துள்ளது. இந்த சம்பம் குறித்து ஆய்வு மேற்கொண்ட வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், விபத்துக்குள்ளான வாகனம் மாணவர்களை ஏற்றி செல்ல முறையான அனுமதி பெறவில்லை என்று நியூஸ் 7 தமிழுக்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாவதி, பள்ளி நிர்வாகம் மீதும், நிர்வாகிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். சம்பவம் தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், விரிவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

முழுமையான விசாரணை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதனிடையே எஸ்.பி செல்வராஜ் ம்ற்றும் ஏ.டி.எஸ்.பி நமசிவாயம் பேச்சுவார்த்தையை அடுத்து 2 மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஹரிவேலன் உடலை பெற்றுக் கொள்ளவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சிவகங்கை மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில்  பள்ளி நிர்வாகத்தினர் ஹரிவேலன் தாயார் கற்பகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில், பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியைகள், எஸ்.பி செல்வராஜ், ஆர்.டி.ஒ சுகிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். மேலும் ஹரிவேலன் தாயார் கற்பகத்துடன் அவரது உறவினர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த உயிரிழந்த மாணவன் ஹரிவேலனின் தாய் கற்பகம், பேச்சுவார்த்தையில் பள்ளியை சீல் வைக்க அதிகாரிகள் ஒத்துக் கொண்டு உள்ளனர். தமிழகத்தில் இதுபோல ஒரு மரணம் நிகழாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை அடுத்து உடலை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்.

இதனை அடுத்து, மாணவன் ஹரிவேலனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஹரிவேலனின் உடல் அவரது சொந்த ஊரான வேம்பத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு வேம்பத்தூரில் உள்ள இடுகாட்டில் மாணவர் ஹரிவேலனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.