ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள சம்பகனா கிராமத்தைச் சேர்ந்த ‘காந்த்’ பழங்குடியின மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து வீடுகளை காலி செய்துள்ள நிகழ்வு அம்மாநில மருத்துவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியின கிராம பகுதிகள் அதிகமுள்ள ஒடிசாவில் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இங்குள்ள கிராம பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வுவை மேற்கொண்டுவருகிறார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒடிசாவில் தற்போதுவரை 45 வயதிற்கு மேற்பட்ட 54,34,038 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 11,22,935 பேருக்கு 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதேபோல் 18- 44 வயதுள்ள 9,68,188 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்திக்கொள்ள 3,70,095 நபர்களுக்கு மட்டுமே முன்வந்துள்ளனர்.
பயத்தை உருவாக்கிய வீடியோ
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்த சம்பகனா கிராமத்திற்குச் சென்ற மருத்துவ குழுவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதுகுறித்து பேசிய மருத்துவர் டி.சைலஜா கூறுகையில், “சம்பகனா கிராமத்தில் ‘காந்த்’ பழங்குடியின மக்கள் மொத்த 500 பேர் வசித்துவருகிறார்கள். அவர்களில் 45-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 100 டோஸ்களை எடுத்துச் சென்றோம். ஆனால் நாங்கள் அந்த பகுதிக்கு சென்றபோது கிராம மக்கள் ஒருவரைகூட எங்களால் காணமுடியவில்லை. அங்கிருந்து 4, 5 கிராம மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவில்லை.
ஏன் கிராம மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவில்லை என விசாரித்தபோது, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அடுத்த 2 மணிநேரத்தில் உயிரிழந்துவிடுவார்கள் என்ற தவறான வீடியோ ஒன்று இப்பகுதியில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.
இந்த தவறான விஷயத்தை நம்பி கிராம மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை தவிர்க்க வீடுகளை காலி செய்துசென்றுள்ளனர் என தெரியவந்தது. பின்னர் காந்த் பழங்குடியினத்தின் தலைவரிடம் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை விளக்கி மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன்பின்புதான் மூன்று பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தனர்” என்கிறார் மருத்துவர் சைலஜா.
தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அவசியம்
இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஒடிசா கிராமங்களில் நடைபெறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒடிசாவில் வாழும் மற்றொரு பழங்குடியினரான ‘டோங்ரியா கோண்ட்ஸ்’ மக்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒருநாள் முழுவதும் அந்த கிராம தலைவரிடம் மருத்துவ குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்பின்னர்தான் ‘டோங்ரியா கோண்ட்ஸ்’ பழங்குடியினத்தைச் சேர்ந்த 1,000 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் ஒடிசாவில் தொடர் நிகழ்வாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுகாலத்தில் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை விளக்கும் விழிப்புணர்வுகள் கிராமங்கள் தோறும் கட்டாயம் கொண்டுசெல்லவேண்டும் என்பது இந்நிகழ்வுகள் மூலம் தெரியவருகிறது.