ஜெயலலிதா போல் நல்லாட்சியை தருவேன் என விகேசசிகலா தெரிவித்திருப்பது குறித்து கருத்து கூறிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா வந்தால் பார்ப்போம் என சூசகமாக பதில் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியில், திருமண விழா ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், தேர்தலுக்கு முன் 505 வாக்குறுதிகளை திமுக மக்களுக்கு அளித்துள்ளதாகவும், ஆனால், ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு பயனளிக்கும் எந்த திட்டங்களையும் திமுக நிறைவேற்ற வில்லை என்றும் சாடினார். ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்கள் வேதனையை தான் சந்தித்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிர்வாக சீர்கேட்டிற்கு இந்த ஓராண்டு உதாரணம் என்ற அவர், அதிமுக பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கியது என்றும், திமுக ஆட்சியில் தரமில்லாத பொங்கல் பொருட்களை வழங்குவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் பொங்கல் பரிசு தொகையும் இல்லாமல் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். பெண்களுக்காக அறிவிக்கப்பட்ட ஆயிரம் மதிப்பூதியம் இன்னும் வழங்கப்படவில்லை ஏன் என கேள்வி எழுப்பிய அவர், அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் மொத்த நிதியில் 55 சதவீதம் பெண்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டதை விளக்கி கூறினார்.
அடித்தட்டு மக்களும், அனைவருக்கும் சமமாக வாழும் வகையில் அதிமுக ஆட்சியில் திட்டங்கள் வகுக்கப் பட்டது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூக நலத்திட்டங்கள் மக்களின் கைகளுக்கு நேரடியாக சென்று சேர்ந்தது தற்போது அதுபோன்ற சூழல் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் சாடினார். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு தானாக வந்து விடுவதையும் சுட்டிக்காட்டினார்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திடம், சசிகலா ஜெயலலிதா போல் நல்லாட்சியை தருவதாக தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா வந்தால் பார்ப்போம் என சூசகமாக பதிலளித்து அங்கிருந்து சென்றார்.