20 சனிக்கிழமைகள் வேலைநாட்களாக அறிவிப்பு ஏன்? #TNSchoolEducation இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

நடப்பு கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாட்களாக அறிவித்தது தொடர்பான வழக்கில் பள்ளி கல்வி இயக்குநர், செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை…

நடப்பு கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாட்களாக அறிவித்தது தொடர்பான வழக்கில் பள்ளி கல்வி இயக்குநர், செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட மனு:

தமிழ்நாடு பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக கருதப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவிப்பாணை வெளியிட்டார். இதன் அடிப்படையில், சனிக்கிழமைதோறும் பள்ளிகளுக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் வருகை தருகின்றனர்.

பள்ளி வேலை நாள்களை அதிகரிப்பது, குறைப்பது, விடுமுறை நாளாக அறிவிப்பது ஆகியவை தமிழ்நாடு அரசின் கொள்கை ரீதியான முடிவாகும். இதன்படி, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மட்டுமே முடிவெடுக்க முடியும். ஆனால், பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு நிகழ் கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக அறிவிப்பாணை வெளியிட அதிகாரம் கிடையாது.

வாரத்தில் ஆறு நாள்களும் வேலை நாள்களாக இருப்பதால் ஆசிரியர்கள், குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அனைவருக்கும் கட்டாய கல்விச் சட்டம் 2009-இன்படி, மாணவர்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஒரு பிரிவாகவும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் வகைப்படுத்தியுள்ளனர்.

இவர்களுக்கு பள்ளிக் கல்வியில் குறைந்த நாள்களே வேலை நாள்களாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பள்ளிக் கல்வி இயக்குநர் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் யாரையும் கலந்தாலோசிக்காமல், 20 சனிக்கிழமைகளை வேலை நாள்களாக அறிவித்து, தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்புக்கு ஆசிரியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பை ஏற்கெனவே பதிவு செய்தன. இதற்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. எனவே, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்ட வேலை நாள்கள் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை இயக்குநர், செயலர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.