மதுரையில் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் செல்போனை வழிப்பறி செய்து விட்டு தப்பியோடிய வட மாநில இளைஞரை பள்ளி மாணவர்கள் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மதுரை மாநகர் ரயில்வே நிலையம் அருகே பெரியார் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் என அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்பட்டு செல்லும் என்பதால் அந்த பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மதுரை தாராப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா ஆகிய இருவரும் இன்று காலை பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறச்சென்றுள்ளனர். அப்போது இருவரின் கையில் வைத்திருந்த செல்போன்களை அந்த பகுதியில் நடந்து சென்ற நான்கு வடமாநில இளைஞர்கள் வழிப்பறி செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கு பேருந்து ஏறுவதற்காக காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், அந்த வட மாநில இளைஞர்களை விரட்டினர். அப்போது ஒரே ஒரு இளைஞர் மட்டும் கையும் களவுமாக பிடித்த நிலையில் மற்ற 3 வட மாநில இளைஞர்களும் தப்பியோடினர்.
இதனையடுத்து பள்ளி மாணவர்கள் மற்றும் அந்த பகுதியில் இருந்த பயணிகள் வழிப்பறியில் ஈடுபட்ட சஜான் என்ற வட மாநில இளைஞரை அழைத்து வந்து போக்குவரத்து அதிகாரிகளிடம் பிடித்துகொடுத்து பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மதுரை மாநகரின் முக்கிய பேருந்து நிலையமான பெரியார் பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு மத்தியில் செல்போன் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற மூன்று வட மாநில இளைஞர்களையும் திடீர் நகர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.