ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆணவக் கொலைச் சம்பவத்தின்போது, தங்களுக்கு யாருமே உதவிக்கு வரவில்லை என்றும், கணவர் இறந்தபின்னரே போலீஸார் வந்ததாகவும் நாகராஜின் மனைவி சுல்தானா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் அங்குள்ள கார் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் கல்லூரியில் படித்தபோதே ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சுல்தானா என்ற அந்தப் பெண் தனது பெயரை பல்லவி என்று மாற்றியுள்ளார். மணமகன் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டில் இந்தத் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில், புதன்கிழமை இரவு 9 மணிக்கு சரோர் நகர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நாகராஜை, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து, நாகராஜின் மனைவி சுல்தான கூறுகையில், நானும் எனது கணவரும் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடந்து கொண்டிருந்தோம். அப்போது, திடீரென எனது சகோதரர் சையது மொபின் அகமது மற்றும் அவரது நண்பர் முகமது மசூத் ஆகிய இருவரும் எதிரில் வந்தனர். நாகராஜை இரும்புக் கம்பியால் தாக்கினர். கத்தியதில் குத்தியதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
என் கண் முன்னே நடைபெற்ற இச்சம்பவத்தின்போது, அருகில் இருந்தவர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தார்களே தவிர உதவிக்கு அழைத்தும் யாருமே வரவில்லை. என் கணவரை 15 முதல் 20 நிமிடங்கள் வரை கடுமையாகத் தாக்கினர். ஆனால், யாருமே அவர்களைத் தடுக்கவில்லை. இந்த சமுதாயத்தில் நல்லவர்களே இல்லை. பொதுமக்கள் கூட்டம் நிரம்பிய பரபரப்பான தெருவில் அங்கிருந்த நபர்களில் ஒருவர் உதவியிருந்தால் கூட ராஜ் பிழைத்திருப்பார். போலீஸார் தகவலறிந்த அரை மணி நேரத்துக்குப் பின்னர் தான் வந்தனர். அதற்குள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஓடிவிட்டனர். என் கணவர் இறந்தபின்னர் தான் பொதுமக்கள் கூடினர் என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக சுல்தானாவின் அண்ணன் மற்றும் அவரது கூட்டாளியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.