நான் அரசியல் போராட்டம் நடத்தவில்லை, அரசு நிறுவனங்களுக்கு எதிராக போராடுகிறேன் என்று குடியரசு தலைவர் எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிகிறது. குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி குடியரசு தலைவர் வேட்பயாளராக திரௌபதி முர்மும், எதிர்க்கட்சி வேட்பாளராக யஷ்வந்த் சின்காவையும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார். இதேபோல் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் என பலரும் வாக்களித்தனர். உபியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர். இதேபோல் அந்தந்த மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்து வருகின்றனர்.
https://twitter.com/ANI/status/1548898878849593344
இந்நிலையில் எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இந்த தேர்தல் நாட்டின் ஜனநாயகத்திற்கு புதிய பாதையை அமைக்கும். அது நிலைத்திருக்குமா அல்லது முடிவுக்கு வருமா என்பது தெரியாது. இதனை அனைத்து வாக்காளர்களும் மனதில் வைத்துக்கொண்டு வாக்களிக்க வேண்டும். இது ஒரு ரகசிய வாக்கெடுப்பு. ஜனநாயகத்தை காப்பாற்ற தங்கள் விருப்பத்தை பயன்படுத்தி என்னை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.
நான் அரசியல் போராட்டத்தை மட்டும் நடத்தவில்லை. அரசு நிறுவனங்களுக்கு எதிராகவும் போராடுகிறேன். அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாகிவிட்டனர். கட்சிகளை உடைத்து மக்களை தங்களுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தி வருகின்றனர். இதில் பண விளையாட்டும் உள்ளது என்று கூறினார்.







