செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் இடங்களில் பிரதமர் மோடியின் படம் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இதை கவனிக்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் புதுச்சேரி கடற்கரையில் தியாகச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆயிரம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த தியாகச்சுவர் அமைக்கும் பணியை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். இதன் பின்பு சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயர் பலகையை தியாகச்சுவரில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை
பதித்தார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், சென்னையில் தேசிய பெருமை வாய்ந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறத் தயாராகி வருகின்றது. ஆனால், எனக்கு ஒரு ஆதங்கம் உள்ளது. தேசிய உணர்வோடு நடத்தக்கூடிய விழா 186 உலக நாடுகளில் இருந்து வீரர்கள் குவிந்து வருகின்றனர். தமிழகத்திற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது மிகுந்த பெருமை. இப்போது கணக்கெடுப்பே நடத்தி சொல்கிறார்கள் உலக நாடுகளில் உள்ளவர்கள் எல்லாம்
உங்களுக்கு யார் பிரதமராக வரவேண்டும் என்றபோது நரேந்திர மோடிதான் பிரதமராக
வரவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்கின்றார்கள். ஆக நாட்டின்
அடையாளமான பிரதமர் மோடியின் படம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் இல்லை. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனிக்க வேண்டும். இனி எல்லா இடங்களிலும்
மோடியின் படம் இடம்பெறச்செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக ஆளுநர்
தமிழிசை தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா







