கடத்தல் விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய எஸ்.பிக்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது : ”தென்காசியில் திருமணமான பெண்ணை கடத்தி, அவரது கணவரை தாக்கிய விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டும் சம்மந்தப்பட்ட ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வழக்குபதிவு செய்ய டி.எஸ்பி, எஸ்.பியிடம் மூன்று முறை அனுமதிகேட்டும், அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் இதுதொடர்பான வீடியோ வைரலாகும் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுபோன்ற அலட்சியமான எஸ்.பியின் நடவடிக்கை, காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. பதற்றமான இச்சம்பவத்தில் காவல்துறை எஸ்.பியின் நடவடிக்கையின்மை பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பதற்றமான சம்பவங்களில் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடத்தல் விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு, எஸ்.பி.க்களின் அனுமதி தேவையில்லை”. இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.