குழந்தை நட்சத்திரங்கள் கலைத்துறையில் பணிபுரியும் போது, அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு NCPCR புதிய சட்ட வரையறை விதிமுறைகளை அறிவித்துள்ளது.
NCPCR என சுருக்கமாக அழைக்கப்படக்கூடிய தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குழந்தைகளின் உரிமைகளை கவனித்து அவர்களை பாதுகாக்கும் பொறுப்பை கொண்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள அனைத்து விதிமுறைகள், திட்டங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் நிர்வாக முகவர்களுக்கான குழந்தைகளை மையப்படுத்திய முறையை அடைய உதவும் ஒரு முக்கிய அமைப்பாகும். குறிப்பாக, குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் அவற்றை நிறைவேற்றுவது மற்றும் செயல்படுத்துவது தொடர்பான விஷயங்களில் சட்டபூர்வமாக கவனம் செலுத்தும் இந்த அமைப்பு, அவர்களது அடிப்படை உரிமைகளான உயிர்வாழும் உரிமை, பாதுகாப்பு மற்றும் பங்கேற்பு உரிமை போன்றவற்றை பேணி பாதுகாக்கும் பொறுப்பை குறிக்கோளாக கொண்டுள்ளது.
அந்த வகையில், குழந்தை நட்சத்திரங்கள் கலைத்துறையில் பணிபுரியும் போது
அவர்களுக்கு எந்த துன்பமும் நேரிடாமல் இருக்க, பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியுள்ள சட்ட விதிமுறைகளை வரையறுத்துள்ள NCPCR அதன்படியே அவர்கள் பணி புரியும் முறையும் கையாளப்படுகிறது. இந்நிலையில், தற்போது NCPCR கலைத்துறையில் பணிபுரியும் குழந்தை நட்சத்திரங்களுக்கான புதிய சட்ட வரையறை விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதில் முக்கியமாக, ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள், நடிக்கவோ அல்லது ஊதியம் பெறக்கூடிய ஏதேனும் கலைதுறை தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தும்போது, அந்தக் குழந்தைகளின் பெற்றோரோ அல்லது அதிகாரபூர்வமான காப்பாளர்களோ அவர்களுடன் கட்டாயம் இருக்க வேண்டுமாம். அதே போல், குழந்தைகளை நடிக்க வைக்கும் போது அந்த மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ள NCPCR, தொடர்ச்சியாக 27 நாட்கள் குழந்தைகளை வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது எனவும், ஒரே நாளில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் குழந்தைகளை வேலை செய்ய வைக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சமயங்களில், அவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் எந்தவித சிக்கல்களும் இருக்கக் கூடாது என்பதோடு, குழந்தைகளின் கல்வி உறுதிசெய்யப்படும் விதமாக அவர்கள் படிப்பை சரியாக தொடர முடியாத விஷயம் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் NCPCR தெரிவித்துள்ளது.
இது தவிர, பணி நேரத்தின் போது குழந்தைகளுக்கு எந்த விதமான பாலியல் தொந்தரவுகளும் ஏற்படக்கூடாது எனவும், அவர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்பட்டு உழைப்புச் சுரண்டல்கள் போன்ற எந்தவித மனஉளைச்சல்களும் நேர்ந்துவிடாமல் கவனமுடன் பார்த்துக் கொள்ள NCPCR அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, குழந்தை நட்சத்திரங்களின் இருபது சதவிகித சம்பளம், அவர்களது எதிர்காலத்திற்க்காக சம்பந்தப்பட்ட அக்குழந்தைகளின் நிலையான வைப்புத்தொகையாக செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள NCPCR இத்தகைய வழிமுறைகளை சரியாக
பின்பற்றி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுகோள்விடுத்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









