தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை நோய் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கல்வியாளர்கள் தங்களது கற்பிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளும் விதமாக தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் உள்ள 15 மருத்துவ கல்லூரிகளில் உள்ள
மருத்துவர்களுக்கு நடைபெறும் பயிலரங்கத்தை சென்னை ராஜீவ் காந்தி அரசு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேசிய மருத்துவக் கல்வி ஆணையத்தின் தலைவர் அருணா வி வணிகர் தலைமையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கிவைத்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கான பாலியல் ரீதியான பிரச்சனைகளை குறித்து விசாரிப்பதற்கு ஏற்ற
விசாகா குழு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகள், ஏழு தனியார் மருத்துவக் கல்லூரிகள், ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள தலா இரண்டு மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 15 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிலரங்கம் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்படி நடைபெறுகிறது.
மேலும், 3.80 லட்சம் மதிப்பில் தேர்வு கண்காணிப்பாளர்கள் அறை கட்டப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களில் இருந்து வரும் தேர்வு கண்காணிப்பாளர்கள் தங்குவதற்கு 3
அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பாளர்கள் வெளியில் தங்குவதால் மாணவர்கள் தன்வசப்படுத்தி தேர்வில் முறைகேடு நடக்கும் சூழ்நிலை உள்ளதால் தேர்வு கண்காணிப்பாளர்கள் தங்குவதற்கு மருத்துவமனையிலே அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 4 மருத்துவர்கள் ஒரே அறையில் தங்கி ஓய்வெடுக்க 2 ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாலியல் வன்புணர்வுக் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை விசாரிக்க தனி அறை இல்லாமல் இருந்தது. இதற்காக 5.85 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் இதய சிறப்பு நிபுணர் முனுசாமி
தினமும் மருத்துவமனைக்கு வருகை தராமலேயே வந்ததாகப் புகார் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்படுவார். மருத்துவர்கள் கடவுள் போன்றவர்கள். இவர்களை நம்பியே மக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர். எனவே, மருத்துவர்கள் இதுபோன்று கிரிமினலாக இருக்கக் கூடாது. தில்லுமுள்ளு செய்யக் கூடாது என்றார்.
தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் இதுவரை 6 நபர்களின் குரங்கம்மை அறிகுறிகளுடன் கூடிய ரத்த மாதிரிகள் பரிசோதிப்பதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பிய நிலையில், குரங்கம்மை பாதிப்பு இல்லை என்ற முடிவுகள் வந்துள்ளன. தமிழகத்தில் குரங்கம்மை நோய் பாதிப்பு அறிகுறி இருந்தால் அதனை பரிசோதிக்க புனே ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
ஈரோடு கருமுட்டை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக மேல்முறையீடு
செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். அவர் குரங்கம்மை நோய் பாதிப்பால் தான் உயிரிழந்துள்ளாரா என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என கேரள அரசு தெரிவித்துள்ளது என்றார்.
-ம.பவித்ரா