தமிழ்நாட்டை எத்தனையாக பிரித்தாலும் திமுக தான் ஆட்சியில் இருக்கும் எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பாக பல்வேறு மாவட்டங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சென்னையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க விழாவும் கன்னி வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்குத் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஆத்தூர் ஒன்றியத்தில் இரண்டு அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கி இருப்பதாகவும், பள்ளிகளுக்குச் செல்வது போல அனைத்து மாணவர்களும் எந்த ஒரு தடையும் இன்றி கல்லூரிக்குச் செல்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு முதலமைச்சர் கல்லூரிகளைத் தொடங்கி வைத்து வருவதாகவும், இன்று தொடங்கப்பட்டிருக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரைவில் கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 300 இடங்களுக்கு 2000 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகக் கூறிய அவர், 100 நாள் வேலைத் திட்டத்திற்குச் செல்பவர்கள் கூட எந்த ஒரு சிரமமும் இன்றி அவர்கள் பிள்ளைகள் படிக்க வைப்பதற்கு ஏதுவாக கல்லூரி தொடங்கப்பட்டிருப்பதாகப் பேசினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொடர்ச்சியாக இந்த அரசுக் கல்விப் பணியில் மிகச் சிறப்பாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கி இருப்பதாகவும், மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு உறுதுணையாக இருக்கும் எனக் கூறினார். மேலும், ரெட்டியார் சத்திரம் பகுதிக்கு மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் 5, 6 கல்லூரிகளைத் தொடங்க முதலமைச்சர் அனுமதி கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண் தலைவர்களின் உறவினர்கள் தலையீடு இருந்தால் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனக் கூறிய அவர், தமிழ்நாட்டை எத்தனையாக பிரித்தாலும் திமுகவே ஆட்சிக்கு வரும் எனத் தெரிவித்தார்.








