2024 ஆம் ஆண்டில் எந்த ஒரு பெரிய கூட்டணியும் இல்லை என்றும், 130 கோடி இந்தியர்களுடன்தான் கூட்டணி என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் பஞ்சாப்பில் காங்கிரஸை தோற்கடித்து ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது. இதைத்தொடர்ந்து, மின் கட்டண சலுகை, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் வழங்குதல் உள்ளிட்ட பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. டெல்லியைத் தொடர்ந்து, பஞ்சாப்பில் ஆட்சி செய்துவரும் அக்கட்சி இந்த ஆண்டின் இறுதியில் குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பல்வேறு கட்சிகளுடனான கூட்டணி குறித்து என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கூட்டணி வைப்பதிலும் எனக்கு ஆர்வமில்லை. எனக்கு எப்படி அரசியல் செய்வது என்று தெரியாது. ஒரு சிலரைத் தோற்கடிப்பதற்காக எதற்கு 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் என எனக்குப் புரியவில்லை. நான் யாரையும் தோற்கடிக்க வரவில்லை. இந்த நாடு வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார்.
மேலும், இலவசங்களை வழங்குவது என்பது மாநிலங்களையும், ஒரு நாட்டையும் உறுதியற்ற நிதிப் பாதையில் கொண்டு சென்றுவிடும் என்று கூறுவது ஆதாரமற்றது. இலவசக் கலாச்சாரம் நாட்டை அழித்துவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் எழுதுகின்றனர். ஆனால், ஊழல் கலாச்சாரம் எவ்வாறு நாட்டை அழித்துவிடும் என்று அவர்கள் எழுதியதில்லை. ஊழலை ஒழித்ததால்தான் என்னால் பொருள்களை மக்களுக்கு இலவசமாக வழங்க முடிகிறது. எனவே, சேமிக்கப்படும் பணம் மக்களுக்கே திரும்பக் கொடுக்கப்படுகிறது என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பஞ்சாப் மாநிலத்தை மீட்டெடுக்கும் பயணம் தீவிரமாகத் தொடங்கியுள்ளது என்றார்.