நெய்வேலி என்.எல்.சி நிறுவன பொறியாளர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள சிஐடியூ அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர் பணிகளுக்கு தேர்வு நடத்தி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 1,500க்கும் மேற்பட்டவர்களில் 8 பேர் மட்டுமே தமிழர்கள் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும் இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகப்படுவதாகவும் தெரிவித்தார்.
என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டம் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் கூறிய பாலகிருஷ்ணன், நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்படும் பொறியாளர் பணியிடத்தில் தமிழகத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள் எனவும் அவர் கூறினார்.







