நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மத்திய பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு ஒருநாள் முன்பாக இந்திய பொருளாதார மதிப்பாய்வு என்று அழைக்கப்படும் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார்.
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். அவரது உரையைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதார நிலை, தேவைப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள், பொருளாதார சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாடாளுமன்ற அவையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த பொருளாதார ஆய்வறிக்கையை இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் பின்னர் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் பொதுமக்களுக்கு வெளியிடுவார் என தெரிகிறது.
பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன?
பொருளாதார ஆய்வு என்பது நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவினால் தயாரிக்கப்பட்டு, தலைமைப் பொருளாதார ஆலோசகரின் (வி ஆனந்த நாகேஸ்வரன் இந்த ஆண்டு) மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு முந்தைய ஆவணமாகும். இது பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த ஆவணம், கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரச் செயல்பாட்டின் நிலையைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும், முக்கிய வளர்ச்சித் திட்டங்கள், அரசாங்கத்தின் கொள்கை முன்முயற்சிகள், மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான (2023-24) வரவுசெலவுத் திட்டத்திற்கான பார்வையை வழங்கும். முதல் பொருளாதார ஆய்வு 1950-51 இல் நடைமுறைக்கு வந்தது. அது பட்ஜெட் ஆவணங்களின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1960களில், பட்ஜெட் ஆவணங்களில் இருந்து கணக்கெடுப்பு பிரிக்கப்பட்டு, யூனியன் பட்ஜெட்டுக்கு ஒரு நாள் முன்னதாக சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- பி. ஜேம்ஸ் லிசா