கூரையை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அண்மைக் காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உணவுகளை தேடி காட்டெருமைகள் பொதுமக்கள் மக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது.
குன்னூர் அருகே உள்ள நல்லப்பன் தெரு பகுதியில் குட்டியுடன் சுற்றித் திரிந்த காட்டெருமை ஒன்று, நிலை தடுமாறி தன்ராஜ் என்பவரது வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு உள்ளே விழுந்தது. இதில் வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், வனச்சரகர் சசிக்குமார் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வீட்டின் கதவை உடைத்து காட்டெருமையை பத்திரமாக மீட்டு குட்டியுடன் வனப்பகுதிக்கு விரட்டினர். சேதமடைந்த வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






