நீலகிரி : நாளை முதல் ஜூன் 5ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்த தடை – தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!

நீலகிரியில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்குவதால் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இதனிடையே, உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் நாளை (ஏப்ரல் 1) முதல் ஜூன் 5-ம் தேதி வரை சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட தோட்டகலைத்துறைக்கு சொந்தமான 7 இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உள்பட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.