நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியின மக்கள் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர், கருணாநிதி அவர்களின் 98 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், உதகையில் உள்ள ஜீப் ஓட்டுனர்கள், கொரோனாவால் உயிரிழந்த சடலங்களை அடக்கம் செய்யும் தன்னார்வலர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா உதகையில் நடைபெற்றது . இவ்விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு கலைஞர் விருது வழங்கி கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவலின் 3 வது அலையை எதிர்கொள்ளும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உதகை சிறுவர் மன்றத்தில் குழந்தைகள் சிகிச்சை பெறும் வகையில், 120 படுக்கை வசதி கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







