நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு பெரியார் குடியிருப்பில் இரவு நேரங்களில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சமடைந்துள்ளனர். எனவே கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் வரும் வனவிலங்குகள் அவ்வப்போது மனிதர்கள் மற்றும் கால்நடைகளை தாக்குகின்றன. குறிப்பாக இங்கு கரடி மற்றும் சிறுத்தைகள் அதிகளவில் நடமாடுகின்றன.
கோத்தகிரி பகுதியிலுள்ள அரவேனு பெரியார் குடியிருப்பில் கடந்த 6 மாதங்களாக கரடி ஒன்று நடமாடி வருகிறது.அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் உலா வரும் கரடியினால் பொதுமக்கள் அவசர தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 3.45 மணியளவில் குயிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இக்காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.தற்போது இக்காட்சிகள் வெளியாகி குடியிருப்புவாசிகளை அச்சமடைய செய்துள்ளது.எனவே கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேந்தன்







