தேசிய புலனாய்வு முகமை சோதனை என்ற பெயரில் சிறுபான்மை மக்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டியில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் தெரிவித்ததாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
” இந்தியாவில் தன்னிச்சையாக செயல்படும் ஒரு தேர்தல் ஆணையத்தை அமைச்சரவை அந்தஸ்திற்கு குறைப்பது சரியல்ல இது வன்மையாக கண்டிக்கக் கூடியது.
வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை தழுவும் என்ற அச்சம் காரணமாக இது போன்ற செயலில் ஈடுபடுகிறது. பல சதி திட்டங்களை செய்து புற வாசல் வழியாக மீண்டும் பாஜக வெற்றி பெற நடவடிக்கை எடுத்து வருகிறது. 2024 பாராளுமன்ற தேர்தலில் மதவாத கொள்கைகளை தூக்கிப் பிடிக்கும் பாஜக அரசின் சதித்திட்டம் முறியடிக்கப்படும்.
தமிழக அரசு 36 இஸ்லாமிய ஆயுள் சிறை வாசிகளை விடுதலை செய்ய வேண்டும் . விரைவில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை என்றால் சட்டமன்றத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும். மரணம் தான் விடுதலையா மன்னிக்க மனம் இல்லையா என தமிழக அரசிற்கு நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.
மகளிர் உரிமை தொகை திட்டத்தை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. இத்திட்டத்தை அனைத்து நபர்களுக்கும் சென்று செல்லும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் தானிப்பாறை மலைவாழ் மக்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் கடை வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என கோரிக்கை.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் நாடாளுமன்றத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாஜக ஒரு தேவையில்லாத ஆணி என்பதை வரும் நாடாளுமன்ற தேர்தல் எதிரொலிக்கும். நடை பயணத்தின் போது மதரீதியான பேச்சுக்கள் பேசி மத மோதல்களை சாதி மோதல்களை தூண்ட பாஜக மாநில தலைவர் முயற்சிக்கிறார். ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜகவிற்கு அருகதை கிடையாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேரணியை தடை செய்ய வேண்டும்.
மதவாதத்தை வீழ்த்துவதற்கான அணியில் எஸ்டிபிஐ கட்சி இடம்பெறும் இந்தியா கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. NIA சிறுபான்மை மக்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. சோதனை என்ற பெயரில் தமிழகத்தில் NIA அச்சத்தை ஏற்படுத்துகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எஸ்டிபிஐ கட்சி செயல்படுகிறது. அரசியல் சூழ்நிலை பொருத்து மாநில நிர்வாகம் முடிவு செய்யும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு பேராபத்து. இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஓரணியில் நிற்க வேண்டும்.