மனித கழிவுகளை அகற்றும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனித கழிவுகளை அகற்றும் போது ஏற்படும் விபத்துகளால், துப்புரவு தொழிலாளிகள் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழும் சோகம் இன்றும் தொடரும் நிலையில், அதை முற்றாக முடிவுக்கு கொண்டு வர ஐஐடி குழுவினர் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். அந்த கருவி குறித்து தற்போது பார்க்கலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மனித சமூகத்தின் இன்றைய வளர்ச்சி, மனிதனால் செய்ய முடியாத எதுவுமே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. மனித அறிவின் ஆற்றல் மனிதனுக்கு தேவையானவற்றை கண்டுபிடித்தாலும், மனித கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் கொடூரத்தை ஒழிப்பதில் அறிவியல் கண்டிப்பிடிப்பாளர்கள் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்கு பல அரசியல் காரணங்கள் இருப்பது வேறு விவகாரம்.
ஆனால், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை முடிவுக்கு கொண்டு வர, ஐஐடி மெட்ராஸை சேர்ந்த பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையிலான குழு புதிய கருவியை கண்டுபிடித்து வெற்றி கண்டுள்ளது.
சஃபாய் கராம்சாரி அந்தோலன் எனும் தன்னார்வ அமைப்பின் கோரிக்கையின் பேரில், பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையிலான குழு, மனித கழிவுகளை அகற்றும் கருவியை உருவாக்கும் பணியில் களமிறங்கியது.
4 வருட கடின முயற்சிக்கு கிடைத்த பலனாக இன்று, பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமையிலான குழு வெற்றிகரமாக மனித கழிவுகளை அகற்றும் கருவை உருவாக்கியுள்ளது. கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் கருவி அதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், அப்படி ஒரு கருவியை உருவாக்குவது தங்களுக்கு மிகவும் சவாலாக இருந்ததாக பிரபு ராஜகோபால் தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவர் ஹரிஷ் கூறுகையில், கழிவு நீர் தொட்டியை பல மாதங்கள் சுத்தம் செய்யப்படாததால், அதில் உள்ள திடக்கழிவுகள் நாளடைவில் இறுகி கல் போன்று மாறிவிடுவதால், மனிதர்கள் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி அதை சுத்தம் செய்யும் தேவை ஏற்படுகிறது. அப்போது, விஷ வாயு தாக்கி உயிரிழக்கும் சோகங்கள் நிகழ்கிறது. இதை தடுக்க, திடக்கழிவுகளை இந்த கருவி உடைத்து அதை உறுஞ்சி வெளியேற்றுவதால், மனிதர்கள் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்க வேண்டிய தேவையில்லை என்றார்.
இதுகுறித்து பேராசிரியர் பிரபு ராஜகோபால் கூறுகையில், மனித கழிவுகளை அகற்றும் பணியின் போது உயிரிழந்தவர்களின் மனைவிகளான நாகம்மா மற்றும் ரூத் மேரி ஆகியோர் நடத்தும் சுய உதவி குழுக்களுக்கு இந்த கழிவு அகற்றும் கருவி வழங்கியது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
ஐஐடி குழுவினர் கூறுகையில், தற்போது, மிகப்பெரிய மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளை சுத்திகரிக்கும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில், தனி விடுகள், சிறிய பகுதிகளில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்திகரிக்கும் கருவிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தனர்.