தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவற்றை மூட துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 1008 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வினி குமார், சுகாராத்துறை செயலாளர் அருண், துணைநிலை ஆளுநரின் ஆலோசகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது, அதன்படி தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பொது அரங்குகள், அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவறுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருமணங்கள் மற்றும் இறுதி ஊர்வலங்களில் ஏற்கனவே 100 நபர்கள் மற்றும் 50 நபர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அதை 50 நபர்கள் மற்றும் 25 நபர்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதுச்சேரி மாநில நிர்வாகம் இன்று வெளியிடும் என்றும் நாளை முதல் இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.







