சட்ட விரோத கட்டிட விவகாரம் தொடர்பாக பிரபல இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு மும்பை மாநகராட்சி மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழில் விஜயகாந்தின் ’கள்ளழகர்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சோனு சூட். சிம்பு நடித்த ஒஸ்தி, அனுஷ்கா நடித்த அருந்ததி உள்பட ஏராளமான படங்களில் வில்லனாக நடித்துள்ள இவர், இந்தி, தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து நிஜ ஹீரோவாக தன்னை நிரூபித்தவர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர், மும்பை ஜூஹுவில் ’லவ் அண்ட் லட்’ என்ற பெயரில் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டலை நடத்தி வந்தார். குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டலுக்கு முறையாக அனுமதி பெறவில்லை. 6 மாடி கொண்ட கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதாகப் பிரச்னை எழுந்தது.
மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, தனது கட்டிடத்தை மீண்டும் அடுக்குமாடி குடியிருப்பாக மாற்ற சம்மதித்தார். இது தொடர்பாக மும்பை மாநகராட்சிக்கு அவர் கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், மும்பை மாநகராட்சி, நடிகர் சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. அதில், ஓட்டலை மாற்றி அமைப்பதாகவும் அனுமதிக்கப்பட்ட படி, குடியிருப்புக் காகவே இனி இந்த இடம் பயன்படுத்தப்படும் என்று ஜூலை மாதம் கூறியிருந்தீர்கள். அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்திருந்தீர்கள். மாநாகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டபோது, சொன்னபடி நீங்கள் பணியை தொடங்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இன்னும் 7 நாட்களுக்குள் நீங்கள் கட்டிட மறுசீரமைப்பு பணியை தொடங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சமூக செயற்பாட்டாளர் கணேஷ் குஸ்முலு என்பவர், ஓட்டலை மகளிர் விடுதியாக மாற்றி வருவதாகவும் மாநகராட்சி அந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.