முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளதாக செய்தி வெளியாகி இருப்பதை சுட்டிக்காட்டினார். கேரள அரசின் இந்த அறிவிப்பு கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணானது என்றும் உச்சநீதிமன்றத்தின் ஆணையை அவமதிப்பது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது என்று தெரிவித்துள்ள துரைமுருகன், கேரள அரசு தன்னிச்சையாக வெளியிட்டுள்ள அறிவிப்பை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு எல்லா விதத்திலும் எதிர்க்கும் என்றும், தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புதிய பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், “முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானதாக இல்லை. எனவே, இந்த அபாயத்தை போக்க நிரந்த தீர்வு காண வேண்டும். முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதே நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும். எனவே, அதனை கருத்தில் கொண்டு கடந்த 2014-ல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், மாறிவரும் காலசூழல், பருவநிலை மாற்றத்தால் கடந்த 2018, 2021-ல் அதிகன மழை கேரளாவில் பெய்தது. இதனால், ஏற்பட்ட தாக்கம் வெள்ளப்பெருக்குக்கு காரணமாக அமைந்தது. எனவே, இந்த இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் முல்லை பெரியாறு அணை இல்லை.
ஏற்கனவே இதேபோல, கன மழையால் உத்தரகண்ட் மாநிலத்தில் கட்டப்பட்ட ஒரு அணை உடைந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, கேரளவின் நிலைப்பாடு புதிய அணை கட்டப்பட வேண்டும் என்பதே. அதேபோல, தற்போது அணையின் பாதுகாப்பு கண்காணிப்பு குழுவை மாற்றி அமைக்க வேண்டும். அணையை கண்காணிக்க முல்லைப்பெரியாறு அணையில் நிரந்தர கண்காணிப்பு குழும் ஏற்படுத்த வேண்டும்” என்பது போன்றவற்றை பதில் மனுவில் கேரளா அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.