ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் நகரங்களை மையமாக கொண்டு 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஐபிஎல் போட்டிக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் உள்ளிட்ட 8 அணிகள் உள்ளன. நடப்பு ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதுவரை மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும், ராஜஸ்தான், ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் உள்ளிட்ட அணிகள் தலா 1 முறையும் கோப்பையை வென்றுள்ளன.
அடுத்தாண்டு முதல் ஐபிஎல்லில் புதியதாக 2 அணிகள் சேர்க்கப்படும் என இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஏலத்தில் புதிய 2 அணிகளை கைப்பற்றுவதற்கான போட்டி முக்கிய நிறுவனங்களிடையே கடுமையாக நடைபெற்றது. இதில், லக்னோ நகரத்தை மையமாக கொண்ட அணியை ஆர்.பி.எஸ்.ஜி நிறுவனம் கைப்பற்றியது. அதன் மதிப்பு தோராயமாக 7000 கோடியாகும். அதேபோல், அகமதாபாத் நகரை மையமாக கொண்ட அணியை சிவிசி கேப்பிடல் பார்னர்ஸ் கைப்பற்றியது. அதன் மதிப்பு சுமார் ரூ.5,200 கோடியாகும்.








