போகப் போக பெரிய பெரிய உயரங்களை அவர் தொட வேண்டும் என நினைக்கிறேன்.
நடிகர் விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் குமரவேல் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து உருவாகியுள்ள படம் சினம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சினம் படத்தின் தயாரிப்பாளர் விஜயகுமார், இயக்குநர் குமரவேல், நடிகர் அருண் விஜய், நடிகை பலக் லால்வானி, இசையமைப்பாளர் சபிர், பாடலாசிரியர் கார்கி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகர்கள் பிரசன்னா, சாந்தனு, இயக்குனர் ஹரி மற்றும் மகிழ் திருமேனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக அருண் விஜய், இப்படத்தில் தனது சொந்த குரலில் பாடிய பாடலை மேடையில் பாடினார். அதன் பின்னர் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் இசை வெளியீடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி பேசும் போது, “அருண் விஜய் பயங்கரமாக பாடுவார் என எதிர்பார்க்கவே இல்லை. அர்ப்பணிப்பு என்ற வகையில் அவர் எல்லா வகையிலும் நடிக்கக் கூடியவர். இப்போது தான் அவரது தொடக்க நிலையில் இருக்கிறார். போகப் போக பெரிய பெரிய உயரங்களை அவர் தொட வேண்டும் என நினைக்கிறேன். விஜயகுமார் சார் தயாரிப்பில் இந்த படம் வெளி வருவது என்பது மகிழ்ச்சி. இசையமைப்பாளர் சபீர் பாடல்கள் நன்றாக இருந்தது, சிவாங்கி ரொம்ப நல்லா பாடி இருக்காங்க, இன்னும் பல பாடல்கள் பாட வேண்டும்” என அவர் பேசினார்.







