இந்தியர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்பெனில் நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது. மேலும் பிரிஸ்பென் மைதானத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். விராட் கோலி இல்லாத இந்திய அணி குறித்து விமர்சனம் செய்தவர்கள் அனைவரும் தற்போது ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்தியர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் பேசியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற பாடத்தையும் இந்த தொடரில் கற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். மேலும் அவர், ‘150 கோடி இந்தியர்கள் இருக்கிறார். அதில் மிகச்சிறந்த 11 பேருடன் விளையாடுவது உங்களுக்கு கடினமாக தான் இருக்கும்.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற பிறகு இந்திய அணி பின்வாங்கவில்லை. அவர்கள் மீண்டும் எதிர்த்து போராடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இதன்மூலம் யாரையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற பாடத்தை கற்றுக் கொண்டோம்’ என தெரிவித்துள்ளார்.







