நாடு முழுவதும் இளங்களை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் இடங்கள் 1.4 லட்சம் உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனித்தனியே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஏப்ரல் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், இந்த தேர்வுக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா பரிந்துரை – யார் இவர்?
அதன்படி, நீட் தேர்வுக்கு நடப்பு ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 20.8 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இது 2.57 லட்சம் அதிகமாகும். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் விண்ணப்பித்துள்ளனர். 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 02 ஆயிரத்து 930 மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படியில் ஒபிசி பிரிவு மாணவர்கள் 8.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







