தேசியவாத காங்கிரஸ் யாருக்கு? அடுத்தடுத்து காய்களை நகர்த்தும் சரத்பவார், அஜித் பவார்!

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் இரு அணிகளாக உடைந்துள்ள நிலையில், கட்சி யாருக்கு என்பதை நிரூபிக்கும் முனைப்பில் சரத் பவாரும், அஜித் பவாரும் இறங்கியுள்ளனர்.  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள்…

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் இரு அணிகளாக உடைந்துள்ள நிலையில், கட்சி யாருக்கு என்பதை நிரூபிக்கும் முனைப்பில் சரத் பவாரும், அஜித் பவாரும் இறங்கியுள்ளனர். 

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தன. இந்நிலையில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.

இதனையடுத்து மகாராஷ்ட்ராவின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே விரிசல் ஏற்பட்ட நிலையில், 40 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவளிப்பதாக அஜித் பவார் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, மகாராஷ்டிராவின் துணை முதல்வராக அஜித் பவார் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சோ்ந்து அக்கட்சியைச் சோ்ந்த 8 எம்எல்ஏ-க்கள் மாநில அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸின் அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மாவட்ட – மாநில நிர்வாகிகளை பந்தராவில் நாளை (ஜூலை 5) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அஜித் பவார் அழைத்துள்ளார். இதே நாளில், ஒய்பி சவான் அரங்கில் நடைபெறும் கூட்டத்துக்கு அனைத்து நிர்வாகிகளையும் சரத் பவாரும் அழைத்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆதரவு யாருக்கு அதிகளவில் இருக்கிறது என்பது நாளை தெரிந்துவிடும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.