நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் தொடர்புடைய சட்டவிரோதப் பணபரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கினார். அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் அந்தச் செய்தித்தாளை அச்சிட்டு வந்தது. அந்த நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டில் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து, அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோரை இயக்குநர்களாக கொண்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாங்கியது. அதன் இயக்குநர்கள் இருவரும் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் எனக் கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு நிதியுதவி அளித்து பிறகு அந்த நிறுவனத்தை யங் இந்தியா கையகப்படுத்தியதில் முறைகேடும், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது மகனும் அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுலுக்கு தொடர்பிருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி புகார் கூறியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கின் விசாரணைக்காக சோனியா மற்றும் ராகுலை நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அண்மையில் சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி ராகுல் இன்று விசாரணைக்காக ஆஜரானார். முன்னதாக, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, சண்டீகர் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு ஜூன் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பவன் பன்சால் ஆகியோரிடமும் அமலாக்கத் துறை ஏற்கனவே விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்