பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்த நாராயண மூர்த்தி!

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது 4 மாத பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்துள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி. இவர் 1981-ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த…

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது 4 மாத பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி. இவர் 1981-ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் 1999-ம் ஆண்டு மார்ச் மாதம் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இவர் 2002-ம் ஆண்டு வரை இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டார். 

கடந்த நவம்பர் மாதத்தில், நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி ஆகியோர் தங்கள் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் அவரது மனைவி அபர்ணா கிருஷ்ணன் ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து தாத்தா, பாட்டியானார்கள். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அக்‌ஷதா மூர்த்தியின் இரண்டு மகள்களுக்குப் பிறகு, மூர்த்தி தம்பதியினருக்குப் பிறந்த மூன்றாவது பேரன் இவர்.

இந்நிலையில், தனது நான்கு மாத பேரன் ஏக்ரகா ரோஹன் மூர்த்திக்கு நாராயண மூர்த்தி சுமார் ரூ.240 கோடி மதிப்புள்ள இன்போசிஸ் பங்குகளை பரிசாக அளித்துள்ளார். இதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸில் ஏக்ரகா ரோஹன் மூர்த்தி 15,00,000 பங்குகள் அல்லது 0.04% பங்குகளை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்திலிருந்து 0.36 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது 1.51 கோடிக்கும் அதிகமான பங்குகள். பங்குச் சந்தையின் விதிமுறைகளுக்கு இணங்க இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.