நாகசைதன்யா- வெங்கட்பிரபு இணையும் NC 22-ல் அரவிந்த்சாமி, சரத்குமார், ப்ரியாமணி மற்றும் பல நடிகர்கள் இணைந்துள்ளனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் NC 22 படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்காலிகமாக NC 22 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். நாகசைதன்யா இதுவரை கதாநாயகானாக நடித்துள்ள படங்களில் NC 22 படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகி வரக்கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் இணைந்துள்ள தொழில்நுட்பக் குழு மற்றும் நடிகர்கள் குறித்தான அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தங்களுடைய வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த திறமையான நடிகர்கள் அரவிந்த்சாமி, சரத்குமார், தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியாமணி ஆகியோர் இந்த ஆக்ஷன் எண்டர்டெயினர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ப்ரேம்ஜி அமரன், ப்ரேமி விஷ்வானந்த், சம்பத்ராஜ் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ’இசைஞானி’ இளையராஜா மற்றும் ’லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். பவன்குமார் வழங்கும் இப்படத்திற்கு, அபூரி ரவி வசனங்கள் எழுத, SR கதிர் ஒளிப்பதிவை கையாள்கிறார். படக்குழு வெளியிட்டுள்ள இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.








