வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோயில் திருவிழாவில் 470 ஆடுகளை வெட்டி நடத்தப்பட்ட கறி விருந்தில் 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவில். இக்கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நேர்த்திக்கடனாக முனியாண்டிக்கு ஆடுகளை பலியிடுவதாக வேண்டிக் கொள்கின்றனர். இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கறி விருந்து அன்னதான திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, 35வது ஆண்டு திருவிழா நடைபெற்றது. 470 கிடாய்களுடன் பொங்கல் பானை ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முனியாண்டி கோயில் முன் ஆடுகள் பலியிடப்பட்டன.
இவ்விழாவில் பெருங்குடி, திருப்பரங்குன்றம், சிந்தாமணி, சாமநத்தம், காரியபட்டி போன்ற சுற்று வட்டார ஊர்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த முனியாண்டி கோவிலில் வேண்டியது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கொரோனா காலகட்டத்தின்போது கூட வெள்ளக்கல் பகுதிகளில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த கோவிலில் முதல் முதலாக எங்கள் பிரச்சனை தீர ஒரு ஆட்டுக்கிடா வெட்டி கோவில் திருவிழா நடத்தப்பட்டது. தற்போது 470-க்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்டு இந்த ஆட்டுக் கிடாய் கறி விருந்து திருவிழா நடைபெறுகிறது என்றும் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.