உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில்
தசரா திருவிழாவில் 8-ம் நாளான நேற்று அம்பாள் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்துப்படியாக தூத்துக்குடி
மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத
முத்தாரம்மன் திருக்கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த தசரா திருவிழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறக்கூடிய தசரா திருவிழாவில் நாள்தோறும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவிழாவின் 8-ம் நாளான நேற்று அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் குலசேகரன்பட்டினம் பகுதி திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
தசரா திருவிழாவில் விரதமிருந்து காப்பு அணிந்த பக்தர்கள் தாங்கள் விரும்பும் வேடங்களை அணிந்து காணிக்கை பெற்று சிகர நிகழ்ச்சியான பத்தாம் திருநாளன்று கோவில் உண்டியலில் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்காரம் வரும் 5-ம் தேதி கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.







