முல்லை பெரியாறு அணை கட்டுமான, நீரியல் ரீதியாக பாதுகாப்பாக உள்ளதென உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க கண்காணிப்பு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் 2வது கூட்டத்தில் அணை பாதுகாப்பு துணைக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதனைக் கலைக்கக் கோரி கேரளாவை சேர்ந்த ஜோய் ஜோசப் வழக்கு தொடர்ந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மனு மீது மத்திய நீர்வள ஆணையம் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், துணைக் குழு அமைத்தது சட்ட விரோதம் என தெரிவித்திருப்பதும், கண்காணிப்பு குழு தனது அதிகாரத்தை துணைக் குழுவுக்கு அளித்திருப்பதாகக் கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது, கண்காணிப்பு குழு உச்ச நீதிமன்ற உத்தரவுபடியே அமைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அணையின் பாதுகாப்பை அவ்வப்போது கண்காணிக்கவும், குறிப்பாக பருவ மழைக்கு முன்னரும், பருவ மழையின்போது அணையின் பாதுகாப்பை கண்காணித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவே துணை குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுபோன்ற சூழலில் துணைக் குழுவை கலைக்கக் கோரி ஜோய் ஜோசப் தாக்கல் செய்துள்ள ரிட் மனு சட்ட ரீதியாக எந்த முகாந்திரத்தையும் கொண்டிருக்கவில்லை. மேலும், இந்த மனு பொய்யான காரணங்களை கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.