முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு மேற்பார்வை குழுவுக்கு அனைத்து அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது. அணையின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான இயக்கம் மிகவும் முக்கியம், அணையின் கண்காணிப்பு மேற்பார்வை குழு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அணை பாதுகாப்பு ஆணையம் செயல்பாட்டுக்கு வரும் வரை மேற்பார்வை குழுவுக்கு முல்லை பெரியாறு அணையில் அனைத்து அதிகாரமும் உள்ளது எனவும், இரு மாநிலத்தில் இருந்து தலா ஒரு நிபுணர்கள் கூடுதலாக மேற்பார்வை குழுவில் இணைக்கிறோம் என்றும் குறிப்பிட்டனர்.தற்போதைய நிலையில் முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வை குழுவே அனைத்தையும் கவனிக்கும், கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவை கடைபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளரே பொறுப்பு என்றும் தெரிவித்தனர்.
கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவுகள், பரிந்துரைகளை இரு மாநிலமும் கடை பிடிக்க வேண்டும், குழுவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கண்காணிப்பு மேற்பார்வை குழுவின் உத்தரவுகளை மதிக்காமல் இருந்தால் அது நீதிமன்ற அவமதிப்பு என்பதோடு கடும் நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும். மேற்பார்வை குழுவில் ஒரு மத்திய அரசு வல்லுனரும் இடம்பெறுவார் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.