பெற்ற மகளை மரத்தில் கட்டித் தொங்கவிட்டு, கொடூரமாகத் தாக்கிய தந்தை, சகோதரர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்புர் மாவட்டத்தில் உள்ளது, படே போல் தலோ என்ற கிராமம். இங்குள்ள இளம் பெண் ஒருவரை பக்கத்து கிராமத்தில் உள்ள இளைஞருக்கு அவர் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். நன்றாக போய் கொண்டிருந்தது வாழ்க்கை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் வேலைக்காக, குஜராத் மாநிலத்துக்குச் சென்றார் அந்தப் பெண்ணின் கணவர். மாமனார் வீட்டில் தனியாக இருப்பது போரடித்தது, அந்தப் பெண்ணுக்கு. இதனால் சில மாதங்களுக்கு பிறகு கணவர் வீட்டில் இருந்து, தனது சொந்த மாமா வீட்டுக்குச் சென்றார். இதுகுறித்த தகவல், அந்தப் பெண்ணின் தந்தைக்குத் தெரியவந்தது.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அவர், தனது மகளை சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். கணவர் வீட்டில் இருந்து எப்படி வெளியேறலாம் என்று கூறி, சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணின் சகோதரர்களும் இணைந்து மரத்தில் கட்டித் தொங்கவிட்டனர். பின்னர் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ பற்றி போலீசாருக்கு தகவல் தெரிந்ததும் விசாரணையில் இறங்கினர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 4 பேரை கைது செய்துள்ளனர்.
பெற்ற மகளை தந்தையே மரத்தில் தொங்கவிட்டு அடித்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.