காட்பாடியில் ரயில் முன் தவறி விழுந்த தாய் – மகன் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் யுவராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய ஆறு மாத ஆண் குழந்தையுடன் நடைமேடையில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். அந்த சமயத்தில் காட்பாடி ரயில் நிலையத்தை நோக்கி எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
தண்டவாளத்தில் பெண்ணும் குழந்தையும் விழுந்ததை கவனித்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால், அவர்களை கடந்து சிறிது தூரம் சென்ற பின்னரே ரயில் நின்றது. இருவரும் தண்டவாளங்களுக்கு இடையே விழுந்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். பின்னர் தாய் – மகன் இருவரும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.








