புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் தேசியக்கல்விக்கொள்கை
அமல்படுத்தியற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தேசியக்கல்விக்கொள்கை கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தாண்டு முதல் அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தேசியக்கல்விக்கொள்கையை அமல்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி) வெளியிட்டுள்ளது.
அதில் இளங்கலை பாடப்பிரிவுகளில் தமிழ் மொழிப் பாடம் 4 பருவங்களாக உள்ளதை 2 பருவங்களாக குறைக்கப்படுவதாகவும், பருவத்திற்கு 24 மணி நேரமாக இருந்த தமிழ்மொழி பாடத்தை வெறும் 8 மணி நேரமாக குறைத்து இருப்பதை கண்டித்தும் தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆழமாக பயிலும் முதுகலை பட்டப்படிப்பை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
மாணவர் கூட்டமைப்பு சார்பில் சுதேசி மில் அருகே பல்வேறு அரசு மற்றும் தனியார்
கல்லூரிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அழைத்துப் பேசி தமிழ் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என
உறுதியளித்துள்ளார். இதற்கான முடிவை அரசு எடுக்காதபட்சத்தில் மாணவர்களின்
போராட்டத்தை தீவீரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.







