வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் என்.சுப்ரமணியன் மீதான புகாரை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிவு எடுக்க
வேண்டும் என சேலம் மாநகர காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
2011-2015 ஆண்டு காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர் நலத் துறை
அமைச்சராக இருந்த சுப்ரமணியன் வேலை வாங்கித் தருவதாக கூறி 65 லட்சம் ரூபாய்
மோசடி செய்துள்ளதாகக் கூறி அதுதொடபான புகாரில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய சேலம் ஜான்சன் பேட்டையை சேர்ந்த கே. முனுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பி அளிக்காமல்
அலைகழித்ததாகவும், சேலம் மாநகர காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில்
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். பணத்தை
கேட்டபோது அடியாட்களை வைத்து முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் மிரட்டியதாகவும்
மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரமணியன் மீதான புகாரை முறையாக விசாரிக்கவும், வழக்குப் பதிவு செய்து
வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கவும் உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில்
கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், முன்னாள் அமைச்சர்
ந.சுப்ரமணியனுக்கு எதிராக மனுதாரர் அளித்த புகாரை இரண்டு வாரங்களில்
விசாரித்து முடிவு எடுக்க வேண்டுமென சேலம் மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டு
வழக்கை முடித்து வைத்தார்.







