துணைவேந்தர் பணி நியமனத்திற்கு முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் ஆளுநர் வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்து கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றிய காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலை கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களில் பெருமளவிலான முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
40 அல்லது 50 கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிக்கப்பட்டதாகவும், அக்காலத்தில் 27 பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பன்வாரிலால் புரோகித்தின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனால் துணைவேந்தர் நியமனங்களில் மட்டும் ரூ.1,500 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்பதோடு, துணைவேந்தர் நியமனங்கள் மட்டுமல்லாது ஆசிரியர் நியமனங்களிலும் பல்லாயிரம் கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆளுநராக இருந்த ஒருவரே முன்வைத்திருக்கும் இத்தகைய ஊழல் குற்றச்சாட்டு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இது குறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை தற்போது பகிரங்கமாக தெரிவித்துள்ள பன்வாரிலால் புரோஹித், ஆளுநராக இருந்தபோது அதை ஏன் தடுக்காமல் அமைதி காத்தார் எனும் கேள்வியும் இயல்பாக எழுகிறது.
எனவே, ஆளுநரும் முறைகேட்டிற்கு அப்பாற்பட்டவரல்ல என்றே கருத வேண்டியுள்ளது. அன்றைய அதிமுக அரசில் லஞ்சம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர் உள்ளிட்ட பணி நியமனங்களை மேற்கொண்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்துவதாக அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.