கேரளாவில் காதலை ஏற்க மறுத்ததால் இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் போலீசில் சரண அடைந்தார்.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே பானூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரியா என்ற
இளம் பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த ஷ்யாம்ஜித் என்ற இளைஞரும் நட்பாக பழகி
வந்தனர். இந்நிலையில் ஷியாம்ஜித்துக்கு விஷ்ணு பிரியா மீது காதல் ஏற்பட்ட
நிலையில், அவர் விஷ்ணுபிரியாவிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் நண்பனாக பழகி வந்த இளைஞனை காதலனாக விஷ்ணு பிரியா ஏற்றுக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சியாம்ஜித், இன்று விஷ்ணு பிரியாவின் வீட்டுக்குள் புகுந்து வேறு யாரும் இல்லாத நேரத்தில் விஷ்ணு பிரியாவின் கழுத்தையும் கையையும் அறுத்து கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த விஷ்ணு பிரியாவை கண்ட தாயார் அதிர்ச்சியில் அலறவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இத்தகவலின் அடிப்படையில், தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தினர். கொலை நடைபெற்ற மூன்று மணி நேரத்தில் கொலை செய்த இளைஞன் ஷியாம்ஜித் தானாகவே முன்வந்து போலீசில் சரணடைந்தார். தனது காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்ததாக அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







