2024ல் மீண்டும் மோடி பிரதமராக வந்தால் தான் நாடு முன்னேறும் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை தி.நகரில் பாஜக அறிவுசார் பிரிவின் சார்பில் மோடியின் பெருமைகள், சாதனைகள் பற்றிப் பேசும் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
கருத்தரங்கை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். நிகழ்வில் நிர்மலா பெரியசாமி, ஷெல்வீ, கோலாகல ஸ்ரீனிவாஸ், கேசவ விநாயகம், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய குஷ்பு, தன் வாழ்க்கை முழுவதும் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அர்ப்பணித்துக்கொண்டவர் பிரதமர் மோடி. எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து வருகின்றனர். ஆனால், சேவை செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார் மோடி. நாடு, நாட்டு மக்களின் முன்னேற்றத்தை மட்டுமே மையமாகக் கொண்டு உழைத்து வருகிறார் மோடி என்றார்.
71 என்பது வெறும் நம்பர் தான், 71 வயது இளைஞர் மோடி என்று புகழாரம் சூட்டிய குஷ்பு, சினிமா ஹீரோக்களை விட, மோடி தான் ரியல் ஹீரோவாக தெரிகிறார் என்றும், மோடி தன் குடும்பத்துக்காக எதையும் செய்துகொண்டதில்லை, 2024ல் மீண்டும் மோடி பிரதமராக வந்தால் தான் நாடு முன்னேறும் என்றும் பேசினார்.







