மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் விலகிய நிலையில் இன்று பொதுச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 7 பேர் விலகியுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக முருகானந்தம் அறிவித்துள்ளார். அவருடன் மாநில செயலாளர் வீர ஷக்தி, மாநில துணை செயலாளர் அய்யனார் உள்ளிட்ட 7 பேர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகியுள்ளனர்.

இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த முருகானந்தம், “மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் சர்வாதிகாரம் தலைதூக்கி ஜனநாயகம் காணாமல் போய் விட்டதாக குற்றம்சாட்டினார். கட்சியின் செயல்பாடு, நன்மதிப்பு குறைந்துவிட்டதாக கூறிய முருகானந்தம், மோசமான கூட்டணியால் கட்சி சுக்குநூறாகவிட்டதாகவும் தெரிவித்தார்.







