மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏ-க்கள் விலகவுள்ளதாக ஏக்நாத் ஷிண்டே அணியினர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சியில் இருந்த போது அக்கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தனி அணியாக பிரிந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தனர். இந்த ஆட்சியில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். ஏக்நாத் ஷிண்டே தாங்கள் தான் உண்மையான சிவசேனா எனக் கூறி வரும் நிலையில், ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் பாஜகவும் சேர்ந்து மஹாராஷ்டிராவை ஆட்சி செய்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வலுத்தது. நீண்ட நாட்களாகவே நீர் பூத்த நெருப்பாக இருந்த இந்த பிரச்னை அண்மையில் விஸ்வரூபம் எடுத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை தனியாக பிரித்து சிவசேனா, பாஜக ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தார். இதனை அடுத்து அஜித்பவார் உள்பட 9 பேர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடித்தனர். இதில் அஜித்பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.
இப்படி அடுத்தடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என முக்கிய கட்சிகளில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மஹாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியிலும் பிளவு நிகழும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணியின் எம்எல்ஏ சஞ்சய் ஷிர்ஷத் தெரிவித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது. காங்கிரசில் இருந்து 16 முதல் 17 எம்ஏல்ஏ-க்கள் விலக விரும்புவதாகவும், இதுகுறித்து அவர்கள் விரைவில் முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது, அம்மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.