திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மறைந்தார். இவர் தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான கதையம்சத்திற்கும், நகைச்சுவைக்கும் புகழ்பெற்றவர். பாக்யராஜின் திடீர் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜின் உடலுக்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இயக்குநர் பாக்யராஜ் மறைவுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!
இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ்.
தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குநர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்புதான், . பாக்யராஜ் திரையுலகில் 50 ஆண்டுகாலத்தை நிறைவுசெய்ததற்கான விழாவில் கலந்துகொண்டு, முதலமைச்சராக மட்டுமின்றி, அவரது இரசிகனாகவும் அந்த விழாவில் பேசியிருந்தேன். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன.
திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர் தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் திருமதி. பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.




