லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, சிம்பு, உதயநிதி, அனிருத், நரேன், இயக்குனர் பா ரஞ்சித், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கியதும், விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், தமிழ் சினிமா எப்போதும் மற்ற சினிமாவுக்கு முன் உதாரணமாகதான் உள்ளது என்றும், கமலுடன் விரைவில் இணைந்து படம் பண்ண உள்ளதாகவும் கூறினார். கமலை வைத்து மதுரையில் சம்பவம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கமல் போன்ற மிகச்சிறந்த கலைஞர் இளம் இயக்குனருடன் பணியாற்றுவது முக்கியமானது என தெரிவித்த ரஞ்சித், மக்களிடம் நெருங்கும் ஒரு இசையை அனிருத் தொடர்ந்து கொடுத்துவருவது பொறாமையாக உள்ளது என்றார்.
இயக்குநர் சந்தானபாரதி பேசும்போது, கமலுக்கும் எனக்கும் 50 ஆண்டுகால நட்பு என்றும் நாங்கள் அடித்த லூட்டி எல்லாம் மேடையில் சொல்ல முடியாது என்றும் கூறினார். பழைய விக்ரமுக்கும் புதிய விக்ரமுக்கும் கமலின் தாடிதான் வித்தியாசம் என்ற அவர், கமலின் எனர்ஜி குறையவில்லை என்றார்.
நடிகை ராதிகா பேசிய போது, எல்லா பத்ம விருதுகளையும் கமலுக்கு தான் தர வேண்டும் என்றார். அனிருத் இசை அருமையாக உள்ளது. கமலை பார்க்கும்போது டைம் லூப் தான் நினைவுக்கு வருகிறது. படம் முழுவதும் ஆண்கள் தான் நிறைந்து இருப்பதாகவும், ஒரு பெண் முகமாவது வையுங்கள் என்றும் நகைச்சுவையாக தெரிவித்தார்.
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பேசும் போது, கேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் சாரின் விக்ரம் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அதே போல தன்னுடைய இரவின் நிழல் படமும் வெளியாக உள்ளது அதுவே தனக்கு பெரிய பாக்கியம் என்றார். அதிமுக அமைச்சர்கள் கூட அம்மாவை பார்க்காமல் இருந்திருக்கலாம். அனிருத் அம்மா 3 நாட்களாக அவரை பார்க்காமல் இருந்துள்ளார். அவ்வளவு கடின உழைப்பை அனிருத் கொடுத்திருக்கிறார் என பார்த்திபன் தெரிவித்தார். முன்னதாக மைக் வேண்டாம் என கூறி டேபிள் மைக்கில் உரையாற்றினார். பொதுவாக மைக்கை நம்பமுடியவில்லை என்றும் சாடினார்.
பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், கமலுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி என கூறினார். கமலை மிரட்டி இப்படத்தை வாங்கிவிட்டீர்களா என கேட்டதாக கூறிய அவர், யார் மிரட்டினாலும் கமல் பயப்படக்கூடியவர் அல்ல என்றும் கமலை யாரும் மிரட்ட முடியாது என்றும் தெரிவித்தார். தானும் கமலின் ரசிகன் தான் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், ஆண்டுக்கு ஒரு படமாவது பண்ணுங்கள் என்று கமலை கேட்டுக்கொண்டார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசும் போது, தனக்கு கடவுள் இருக்கீறாரா? என்று தெரியாது. உங்களை பார்க்கிறேன். கடவுள் இருக்காரா என்று ஆராய்ச்சி செய்து வருகிறேன் என்றார். கமல் நடிக்க சொல்லி கொடுத்து கமல்ஹாசனை பார்த்து காப்பி அடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது என்றார். கமலின் அறிவு வியக்கத்தக்கது என்ற அவர், கமலின் எழுத்துக்கு தான் மிகப்பெரிய ரசிகன் என்றும் புகழாரம் சூட்டினார்.
நடிகர் சிலம்பரசன் பேசும்போது, தான் எப்போதும் மேடை ஏறியதும் இறைவனுக்கு நன்றி தெரிவிப்பேன் ஆனால் ஆண்டவரே (கமல்ஹாசன்) இங்கு உள்ளார் என தெரிவித்தார். தான் ஒரு சில இயக்குனர் உடன் தான் பேசுவேன் என்றும் அதில் லோகேஷ் கனகராஜ் ஒருவர் என்றும் கூறிய சிலம்பரசன் இப்படம் நிச்சயம் சூப்பர்ஹிட் ஆகும் என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, சின்ன வயதில் கமல் வீட்டு வாசலில் நின்று அவர் கையசைக்க மாட்டாரா என்று காத்திருந்தேன் என்றும் இப்போது அவர் படத்திற்கு ஆக்ஷன், கட் சொல்கிறேன் என்றும் கூறினார். கமல் மிக சிறப்பாக வேலை செய்தார் என்ற லோகேஷ் கனகராஜ், படத்தில் நடிகர் சூர்யாவும் நடித்துள்ளார் என்றார். கமலுடைய உழைப்புக்கு முன்னாடி நான் இந்த வயதில் பண்ணுவதெல்லால் உழைப்பே அல்ல என்றும் கூறினார்.
பின்னர் பேசிய நடிகர் கமல்ஹாசன், 4 ஆண்டுகளுக்கு பின் தனது படத்தின் விழா நடப்பதாகவும், அதற்கு தான் மட்டும் காரணம் அல்ல நீங்களும் தான் காரணம் என்றார். தமிழகத்தை பொறுத்தவரை சினிமாவும் அரசியலும் ஒட்டிப்பிறந்தவர்கள், தான் முழுநேர நடிகனும் அல்ல பாதி நேரம் நடிக்காததால் பல இன்னல்களை சந்தித்துள்ளேன் என்றும் கூறினார். அரசியல் களத்தில் புதிய நாகரீகத்தை ஏற்படுத்த வேண்டியது நமது கடமை. இந்தியாவின் அழகு பன்முகத்தன்மைதான் எல்லாரும் இணைந்து கைகோர்த்தால்தான் இந்தியா என கமல்ஹாசன் தெரிவித்தார்.
இந்தி ஒழிக என சொல்வது என் வேலையல்ல தனக்கு இன்னொரு மொழியை ஒழிக சொல்வது உடன்பாடுகிடையாது என்றார். எந்த மொழியையும் கற்று கொள்ளலாம் ஆனால் தாய் மொழியை மறக்க கூடாது என்றார். அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர் முக ஸ்டாலின் என்ற கமல்ஹாசன், எப்படி என்று கேட்டால், ரஜினி என்னுடைய போட்டியாளராக இருந்து கொண்டு நண்பராக இல்லையா அது போல தான் என கமல்ஹாசன் விளக்கமளித்தார்.